Friday 31 July 2015

கனவை நனவாக்க வாரீர் !

2015 ம்  ஆண்டு ஜூலை 27 ம் நாள் யாராலும் மறக்க முடியாத  நாள். ஏனெனில் அன்றுதான் ஐயா அப்துல்  கலாம் அவர்கள்  மறைந்த நாள் . அவரது கனவு படி 2020 ல் இந்தியா வல்லரசு ஆக வேண்டுமெனில் , முதலில் கல்வி துறையே மாற்றம் பெற வேண்டும் . அவர் விரும்பியபடி  மாணவர்களே  அந்த மாற்றத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும் .


மாற்றம் வரவேண்டுமெனில் சில முடிவுகள் எடுக்க வேண்டும் :

1.   டியூஷன்   முறைகளை ஒழிப்பது . அதற்க்கு நாம் செய்ய வேண்டியது .

இனி தினந்தோறும் குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது யாரேனும் மற்றொரு மாணவருக்கு பாடம் சொல்லி தருவது.
P .G  படிப்பவர் எனில் U .G  படிப்பவருக்கும் ,
U .G  படிப்பவர் எனில் பனிரெண்டாம் வகுப்பு படிப்பவருக்கும் ,
பனிரெண்டாம் வகுப்பு படிப்பவர் எனில் பத்தாம் வகுப்பு படிப்பவருக்கும் ,
பத்தாம் வகுப்பு படிப்பவர் எனில் எட்டாம் வகுப்பு படிப்பவருக்கும்,
எட்டாம் வகுப்பு படிப்பவர் எனில் ஐந்தாம் வகுப்பு படிப்பவருக்கும் , தனது படிப்பு நேரம் தவிர்த்து , குறைந்த பட்சம்  ஒரு மணி நேரம்
இலவசமாக பாடம் சொல்லி தருவது.

இவ்வாறு செய்தால் டியூஷன் என்ற பெயரால் நடக்கபடும் தவறுகள் தடுக்க படும். ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தனக்கென தனி மாணவர்களை வைத்து பாடம் நடத்துவது தடுக்க படும் . தகுதியான ஆசிரியர்கள் அனைவருக்கும் கிடைப்பர் .


lord macaulay க்கான பட முடிவு


2.     Macaulay ன்  இந்த கல்வி முறையில் இருந்து வெளி வருவது. ஆம் இந்த கல்வி திட்டமானது நம்மையெல்லாம் அடிமைகளாக மாற்ற  Macaulay எனும் ஆங்கிலேயன் 1835 -40 களில் தானே தயாரித்த கல்வி திட்டம் . அதற்க்கான காரணத்தை அவருடைய கடிதம் வாயிலாக நாம் அறிவோம். இதோ அக்கடிதம்,
lord macaulay க்கான பட முடிவு
இதிலிருந்து வெளி வர வேண்டும் எனில் தெரியாத விஷயங்களை , தெளிவு படுத்த ஆசிரியரை வலியுறுத்த வேண்டும் . ( a2 + b 2 )  இது எந்தெந்த இடங்களில் பயன்படுத்த படுகிறது என்பன போன்று எல்லா பாடங்களுக்கும் பயன்பாடுகள் அறிந்து கொள்ள வேண்டும்.

3.     கணிதமும் , அறிவியலும் வெறும் மனப்பாடம் செய்யும் பாடங்களாக இருப்பதிலிருந்து வெளிவருவது .   அதன் ஒவ்வொரு சூத்திரமும் எங்கு பயன்படுத்த படுகிறது என்பதை அறிவது .  இது ஒன்றே A .P .J .அப்துல் கலாம் அவர்கள் கூறிய அறிவியல் தமிழ் வளர உதவும்.

4.     எந்த பாடத்திற்கும் விளக்கம் அளிக்காத கல்வியை புறக்கணிக்க வேண்டும்..

5.     நல்ல கல்வியாளனாக மாற வேண்டும் , தரமான ஆசிரியர்களை
உருவாக்க வேண்டும் .

6.      ஏதேனும் ஒரு அறிவியலாளரின்  கதையோ , கட்டுரையோ படிப்பதை வழக்கமாக மாற்றி கொள்ள வேண்டும் .

7.     வெறும் மதிப்பெண்களுக்காக படித்து , மதிபெண்ணுக்காகவே வாழும் மடமையில் இருந்து வெளியேற வேண்டும்.

8.      பாஸ் , பெயில் , grade , இது போன்ற மாயையில் இருந்து வெளி வந்து , எந்த ஒரு பாடத்தையும்  கற்று கொள்ள முயற்சிக்க வேண்டும். .

9.     அறிவியலோடு , அரசியலும் , ஆன்மிகம் என்ற பெயரில் நடப்பவைகளையும் அறிந்து கொள்ள வேண்டும்.

10.    விஞ்ஞானத்தோடு , நம் வாழ்வுக்கு தேவையான விவசாயத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் .

அது அதற்கென்று தனிதனி துறைகள் உண்டு . அங்கு சென்றால் மட்டும்தான் அதை படிக்க முடியும் என்பதும், ஒருவர் ஒரு துறையை மட்டும்தான் படிக்க வேண்டும் என்பதும் நமக்காக ஏற்படுத்த பட்ட மாயைகள்.



நம்மையெல்லாம் மார்க் என்ற மோகத்திற்குள் தள்ளி நம்மை எதற்க்காக தயாரிக்கிறார்கள் என்பதை நமக்கே தெரியாமல் , செய்து நம்மை சுற்றிலும் மாய வலை பின்னியதன் விளைவுதான் இன்று நாம் உண்ணும் காய்கறிகள் கூட விஷமாக மாற காரணம் . 


படித்தால்  கேள்வி கேட்டுவிடுவான் என்று எந்தெந்த துறைகளில் தோன்றியதோ அத்துறை சார்ந்த எந்த ஒரு பாடமும் சராசரி மாணவனுக்கு போய் சேர விடாமல் தடுக்கவே , மருத்துவம்,வானியல் , வேளாண்மை, சட்டம்,  விலங்கியல்  , பிரமிடு போன்ற நமது பழைய கட்டட கலை முறைகள், பண மதிப்பு எப்போதிருந்து பிற நாடுகளை  விட குறைந்து போனது
இவை எதுவும் நம் பாட புத்தகங்களில் இணைக்க படவில்லை .

எனில் கடந்த 250 ஆண்டுகளாக இந்த துறைகளில் எல்லாம் எதோ தவறுக்கான அடித்தளம் விதைக்க பட்டிருக்கிறது .

பணக்கார்கள் மட்டும் இதை படிக்கும் போது , பணத்தை சம்பாதிக்க மட்டுமே அவர்களுக்கும் கற்றுத்தர படுகிறது

 ( இதோ இந்திய பண மதிப்பு அமெரிக்கவுடுன் ஒரு ஒப்பிடு பட்டியல் )   ,


இந்தியா சுதந்திரம் அடைந்த போது , நம் நாட்டின் சொத்துகளை வெள்ளையன் சுரண்டி சென்ற போது கூட  இந்தியா எவரிடமும் கடன் பெறவில்லை.
இந்திய ரூபாய்ன் மதிப்பு , அமெரிக்க டாலருக்கு இணையாகவே இருந்தது.பிறகு என்ன நடந்தது?. இந்த வரலாறு அல்லவா நம் வரலாறு பாட புத்தகத்தில் இருக்க வேண்டும்.

என்றாவது ஒரு நாள் , தாவரவியல் ஆசிரியர்கள் மரங்களை நடும் முறை குறித்தோ , ஒவ்வொரு மரத்திற்கும் இடையில் இருக்கும் இடைவெளி குறித்தோ சொல்லி கொடுத்ததுண்டா ? இதை விட்டுவிட்டு இதன் ஆங்கில பெயர்கள் நமக்கு எதற்கு ? அதன் குடும்ப பெயர்கள் எதற்கு ? அதை நாம் தெரிந்து கொள்வதால் என்ன பயன் ?

ஆனால் நம் தமிழ் கூறுகிறது ,

     நெல்லுக்கு நெல் நண்டு  ஓட ,
          வாழைக்கு வாழை வண்டி ஓட ,
               தென்னைக்கு தென்னை தேர் ஓட

இடைவெளி விட வேண்டும் என்று.  இதையெல்லாம் நம் தமிழ் புத்தகமும் தரவில்லை , தாவரவியல் புத்தகமும் தரவில்லை. ஏன் ?


வானியல் குறித்து நமக்கு துளியும் சொல்லி தர வில்லை . ஏன் , நாம் வானியல் ஆய்வு குறித்த தகவலுக்காகவும் வேற்று நாட்டவரை நம்பி இருக்க வேண்டுமா ?

மழை எப்போது வரும் என்பதை ரமணன் கூறினால் தான் அறிந்து கொள்ள முடியுமா ? 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை , எல்லோருக்கும் தெரிந்த மழை சார்ந்த அறிவியலும் , வானியல் குறித்த அறிவும் , இன்று எங்கோ ஒன்றிரண்டு வயதானவர்களுக்கு மட்டுமே தெரிவதன் காரணம் என்ன ?

ஆனால் நம்மாழ்வார் நமக்கு கூறுகிறார் இவையெல்லாம் நம் நாட்டின் பழமொழிகளில்  உள்ளது என்று,
அவை :
          " தவளை கத்தினால் , தானே மழை வரும் "

          " அந்தி ஈசல் பூத்தால் அடை மழைக்கு அறிகுறி "

          " தும்பி பறந்தால் தூரத்தில் மழை "

          " எறும்பு ஏறில் பெரும் புயல் வரும் "
         
          " மார்கழி மழை மண்ணுக்கு உதவாது "

          " தை மழை நெய் மழை "

ஏன் நம் தமிழ் புத்தகங்கள் கூட நம்மை ஏமாற்றின ?

நமக்கு நன்மை செய்ய கூடிய நம்முடைய கட்டிட கலை முறைகள் நமக்கு சொல்லி தர மறுக்க பட்டது ஏனோ ?
       
விலங்குகளுக்காக விழா எடுக்கும் நம்மிடமே விலங்குகள் குறித்தும், அதன் மீது அன்பு காட்டுவது குறித்தும் ப்ளூ கிராஸ்  கூறுகிறதா ? இதன் பின்னணி வரலாறு என்ன ? சொல்லி தர ஆளும் இல்லை. எந்த நூலும் இல்லை .

நாமெல்லாம் குதிரைகள் அல்ல . கடிவாளம் கட்டி கொண்டு ,
ஒரே பாதை யை மட்டும் பார்பதற்கு .  இதை எல்லாம் ஒரு நாளும் அரசாங்கம் மாற்றாது. ஏனெனில்  Macaulay ன்   கல்வி கொள்கையை பயன்படுத்தி கொண்டு
 இருக்கிறார்கள் நமது அரசியல் வாதிகள் .

அப்துல் கலாம் கண்ட வல்லரசு கனவு நனவாக  வேண்டுமாயின் அது மாணவர்கள் கையில் மட்டுமே உள்ளது .

கல்வியில் மாற்றம் மட்டுமே அக்கனவை நனவாக்கும்.

அம்மாற்றம் மட்டுமே வல்லரசு நாடு எனும் விதையை விதைக்கும்.


மாற்றம் கொணர்வோம் ! வல்லரசாக மாறுவோம் !

அப்துல் கலாம் அவர்களின் வழி நடப்போம் !

Wednesday 29 July 2015

அய்யா A .P .J .அப்துல் கலாம் அவர்களே !

அய்யா A .P .J .அப்துல் கலாம் அவர்களே !



இன்று அழுது கொண்டிருக்கும் எவருக்கும் நீர்  உறவில்லை!
ஆனால் எவராலும் அழுகையை நிறுத்த முடியவில்லை !
நீர் திருமணம் செய்திருந்து , பிள்ளை பெற்று இருந்தால் கூட
இத்தனை பிள்ளைகள் உனக்காக அழுதிருக்க மாட்டார்கள் !


சம்பாத்தியம் என்றால் என்ன வென்று இந்த உலதிற்கு காட்டியவர் நீர் !
இத்தனை பேர் விடும் கண்ணீரும் எந்த எதிர்பார்பிற்க்கும் உட்பட்டது இல்லை !
இத்தனை பேர் விடும் கண்ணீரிலும் எந்த பொய்யும் இல்லை !
இத்தனை பேர் விடும் கண்ணீரிலும் எந்த வஞ்சமும் இல்லை !
இது தான் சம்பாத்தியம் !


இதில் அரசியலும் இல்லை !
ஆன்மீகமும் இல்லை !
ஜாதியும் இல்லை !
இனமும் இல்லை !
மொழியும் இல்லை !
நாடுகள் என்ற வேறுபாடு  கூட இல்லை !

அத்தனை பேரையும் ஈன்றெடுத்த பெற்றோர்
வேறுவேறாக இருக்கலாம் !
ஆனால் அத்தனை பேருக்கும் அறிவு வழி
தகப்பன் ஆனீர் !

நீர் பிறந்த மண்ணில் இன்று
ஏதேதோ வேலைகள் நிகழ்கிறது  - உமக்காக !
பல்லாயிரம் மக்கள் காத்திருக்கிறார்கள் - உமக்காக!
அதையும் கடந்து படிக்க வேண்டிய நேரத்தில்
பல்லாயிரம் மாணவர்கள் நீர்
மீண்டு வருவீர் !
மீண்டும் வருவீர் !
என்று கண்ணீர் மல்க ஆவலுடன் நிற்கின்றனர் !

நீர் மீண்டும் இங்கு வரும்போது
உமது கனவை நினைவாக்கி
இந்தியாவை வல்லரசு ஆக்கி இருப்போம் !
என்று ஓர் இளைஞர் கூட்டம்
சூளுரைத்து காத்து இருக்கிறது !

நீர் கண் மூடி கனவிலே இதையெல்லாம்
கண்டு கொண்டு இருக்கிறீர் !
நீர் கண் திறந்து எங்கேனும் பிறந்திருப் பீர் !
என்ற நம்பிக்கையில்
இந்த சூளுரைகள் நாளை - நீர் காண
உன் கண் முன்னே நிறைவேறும் !

பயோ டீசெளில் புகைவண்டிகள் இயங்கும்
தடையில்லா மின்சாரம் எல்லா இடங்களிலும் கிடைக்கும்
தரமான ஆசிரியர்கள்
மாணவர்களின் கேள்விக்கெல்லாம் பதில் தருவர்
உழவும் வளரும்
அணு ஆய்வும் வளரும்
உண்மையும் , நேர்மையும்
தன்னம்பிக்கையும், தன்னடக்கமும்
வளரும் !

இது நீர் விதைத்த விதை !
மரமாகும் !
இதன் குளுமையை காண
இதன் பசுமையை காண
இதன் பழங்கள் ருசிக்க
மாணவர்கள் வேண்டுகோளை ஏற்று
மீண்டு வருவீர் !
மீண்டும் இந்த பூமிக்கு வருவீர் !




வணிகத்திற்கான 7 மூலங்கள் - 7 Business Strategies for Tamil

வணிகத்திற்கான 7 மூலங்கள் : வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் ! முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே ! ஒரு வணிகம் செய்யலாம் ...